சென்னை: பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் ஜப்பான் சுற்றுலாவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றுலாவில் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.பவித்ராவும் அடக்கம். இவர்கள் அனைவரும் ஜப்பானுக்கு இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
தொழிற்பயிற்சிக்காக ஜப்பான் சென்று திரும்பியவர்களால் தொடங்கப்பட்டது "ஏபிகே- ஏஓடிஎஸ் தோசோகாய்' தமிழ்நாடு மையம். இந்த மையம் "ஹியோஷி கார்ப்பரேஷன்' என்ற ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுதோறும் அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த சில வாரங்களாக பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று வந்தது. பின்னர், பரிசளிப்பு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதர் ஷீஜிபாபா வழங்கினார்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் 2 வார காலம் ஜப்பானைச் சுற்றிப் பார்க்கலாம். சுற்றுலாவுக்கான செலவுகள் அனைத்தையும் ஹியோஷி நிறுவனம் ஏற்கிறது.
டி.பவித்ரா- பிளஸ் 2, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அசோக்நகர், சென்னை; எம்.ரூபன்- பிளஸ் 1, புனித மேரி மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்; ஆர்.ஆயுஷ், கே.சி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, காரப்பாக்கம், சென்னை; சிம்ஹாஞ்சனா, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை; ஆர்.துர்கா- நிகாங்கோ கேக்கோ ஜப்பான் மொழிப் பள்ளி, அரும்பாக்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் ஆவர்.