தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களில் துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமலிலிருந்த நிலையில் உயர்கல்வி மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது.
அதனைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மேலும், மாணவர்களின் 10, 11-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வின் அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இருப்பினும், இந்த மதிப்பெண் கணக்கிடும் முறைக்கு உடன்பாடு இல்லாத மாணவர்களுக்கு தனியே தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, கடந்த செப்டம்பர் 16 முதல் 28ம் தேதி வரையில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வு நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த தேர்வின் முடிவுகள் வரும் நவம்பர் 19-ம் தேதியன்று (19.11.2021) காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வில் பங்கேற்க மாணவர்கள் www.dge.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக தேர்வு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும், இந்த தேர்வு முடிவினைத் தொடர்ந்து செப்டம்பர் 2021 தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 22.11.2021 மற்றும் 23.11.2021 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.