சென்னை: கோடை வெயில் கொளுத்தினாலும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் மாற்றம் செய்யப்படாது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பள்ளி திறக்கும் நாளை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்த நிலையிலும், சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்தெடுக்கிறது. இதில், சென்னையில் நேற்று மட்டும் 109 டிகிரி வெப்பம் பதிவானதால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர்.
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வறுத்தெடுக்கும் அக்னி வெயில் காரணமாக ஆங்காங்கே சுருண்டு விழுந்து பலியாகி வருகின்றனர். வெயிலுக்கு அஞ்சி வெளியே வரவே மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் எனவே பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும். கொளுத்தும் வெயிலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நாள் அன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில் புதுச்சேரியில் சுட்டெரிக்கும் வெயிலை அடுத்து பள்ளி திறப்பு ஜூன் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல், தமிழகத்திலும் வெயில் காரணமாக பள்ளிகளின் திறப்பை ஒத்திவைக்கவேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.