கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், எப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, அன்லாக் முறையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்புகள் வெளிவராத நிலையே உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு உத்தரவிட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள், வருகைப் பதிவேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், தனித் தேர்வர்களுக்கான எவ்வித அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.
இதனைத் தொடர்ந்து, தனித் தேர்வர்களையும் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையைச் சேர்ந்த வருண்குமார் எனும் மாணவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், பதினொன்றாம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், தனித் தேர்வர்கள் அதில் பங்கேற்க முடியாத நிலை நீடித்து வருகிறது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு குறித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதற்கு, தமிழக கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து எவ்வித முடிவும் தற்போது எடுக்கவில்லை. தனித் தேர்வர்களுக்குத் தேர்வு நடத்தி இரு வாரங்களில் முடிவு வெளியிடப்படும் எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு குறித்தான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.