நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
தொடர்ந்து சுமார் 7 மாதங்கள் கடந்துவிட்டட நிலையிலும் தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் எப்போது திறக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக உள்ள ஊரடங்கை வரும் 31ஆம் தேதி வரையில் மத்திய அரசு, UNLOCK 5.0 இன் கீழ் நீட்டித்துள்ளது. அதன்படி, கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர இதர பகுதிகளில் மேலும் சில நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அதில், பள்ளி உள்ளிட்ட நிறுவனங்களைத் திறப்பது குறித்து அக்டோபர் 15ஆம் தேதிக்கு மேல் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்று அனுமதி அளித்திருந்தது.
வழிகாட்டு நெறிமுறைகள்
அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு சில நெறிமுறைகளையும் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. அந்த நெறிமுறைகளின்படி பல்வேறு மாநில அரசுகளும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் திறக்கப்படும் பள்ளிகள்
இதனிடையே, தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று தங்களுடைய பாட சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும், இதனை நடைமுறைப்படுத்தும் பொழுது மாணவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் அந்த அறிவிப்பும் திரும்பப் பெறப்பட்டது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி சில மாநிலங்களில் அக்டோபர் 15-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், தமிழகத்தில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என நவம்பர் 11-ம் தேதிக்குள் அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி திறப்பு குறித்து தமிழகத்தில் ஆலோசனை
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். அதில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் வெங்கடேஷ் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அமைச்சர் அதிரடி
இதனிடையே, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பதிலளித்துள்ளார்.
முதலமைச்சர் தான் அறிவிப்பார்
மேலும், இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளைத் திறப்பதற்கு தற்போது சாத்தியமில்லை என்றும், இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு முடிவு செய்யப்படும். மேலும், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார் என்றும் கூறியுள்ளார்.
ஆந்திரா, அசாமில் பள்ளிகள் திறப்பு!
இதனிடையே, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 7 மாதங்களுக்குப் பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஆந்திரா, அசாம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.