கொரோனா தளர்வுகளின் ஒரு பகுதியாக அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம் என்றும், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிவிப்பை நிறுத்தி வைத்தார்.
மேலும், தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதி குறித்த முக்கிய அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டுள்ளது. அதுகுறித்த விபரங்களைக் காணலாம் வாங்க.
கொரானாவால் மூடப்பட்ட பள்ளிகள்
இந்தியாவில் கொரோனா தொற்று பரவியதைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் தொடர்ந்து தற்போது வரையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. குறிப்பாக, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் அறிவிப்பிற்காகப் பெற்றோர்கள், மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்பிலிருந்து வருகின்றனர்.
ஆன்லைன் வழியில் வகுப்புகள்
இதனிடையே, பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படாத வகையில், ஆன்லைன் வழியில் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஸ்மார்ட் போன் வசதிகள் இல்லாத மாணவர்களும் கல்வி கற்றும் வகையில் கல்வித் தொலைக் காட்சி வாயிலாகப் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்
இந்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர்களின் ஒப்புதலுடன் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிக்கு வந்து சந்தேகங்களைக் கேட்டறிந்து கொள்ளலாம் என தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டிருந்தது.
பின் வாங்கிய முதலமைச்சர்
அதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் இந்த சூழ்நிலையில், மாணவர்களைப் பள்ளிக்கு வர சொல்வது சரியான முடிவு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியதால் அக்டோபர் 1 முதல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்ற தமிழக அரசின் அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பள்ளிகள் திறப்பு எப்போது
மேலும், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்படும். அதன் பின்பு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!
அதுமட்டுமின்றி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு எப்போது வரலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுக் கூட்டத்திற்குப் பிறகு முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.