கொரோனா தளர்வுகளின் ஒரு பகுதியாக நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்கலாம் என்றும், 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்கேட்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 16ம் முதல் பள்ளி திறப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதில், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டும் வருகை புரியலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
பள்ளி ஊழியர்களுக்கு கொரோனனா
முன்னதாக மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் பள்ளிகளைத் திறந்தன. ஆனால், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
575 மாணவர்களுக்கு கொரோனா
ஆந்திராவில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 2-ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட மூன்று நாள்களுக்குள் 575 மாணவர்களும், 829 ஆசிரியர்களும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிரண்டுபோன தமிழக அரசு
அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் தமிழக அரசு செவ்தறியாது தற்போது பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்தியுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
இதனைத் தொடர்ந்து இன்று ஈரோட்டில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பிற மாநிலங்களில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இது எச்சரிக்கையாக அமைந்துள்ளது. மாணவர்களைக் கவனமாகக் கையாள வேண்டிய சூழலில் இருக்கிறோம். இந்த சூழலில் தமிழகத்தில் பள்ளிகள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், தனியார்ப் பள்ளி நிர்வாகங்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்
நடப்பாண்டில் 2,505 பள்ளிகளுக்கு அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்கள் அனைவரும் பள்ளிக்குச் செல்ல மிகுந்த ஆர்வமாக இருக்கின்றனர். ஒருவேளை நடப்பாண்டு பள்ளிகளைத் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டால் பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும். கருத்துக் கேட்புக் கூட்டத்தின் அடிப்படையில் முதலமைச்சர் விரைவாக நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
நாளை அறிவிப்பார்
இந்நிலையில் நாளை பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக தமிழக முதலமைச்சர் அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முதலமைச்சர் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று பள்ளி, கல்லூரி மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தள்ளிப்போகும் பள்ளி, கல்லூரி திறப்பு
இதனிடையே, ஆசிரியர்கள் தரப்பில் முதலமைச்சருக்கு சில கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று தமிழக அரசு பள்ளிகள் திறப்பை மட்டுமின்றி, கல்லூரிகள் திறப்பையும் தள்ளிப்போடத் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை முதலமைச்சரின் 3 மாவட்ட சுற்றுப்பயணத்தின்போது அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.