கோடை விடுமுறையை சிறந்ததாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி பருவத் தேர்வுகள் முடிவுற்று வரும் நிலையில் கோடை விடுமுறை நாள்களில் மாணவர்கள் தினமும் நாளிதழ்களை படிக்க வேண்டும் என்றும், அரசு பொது நூலகத்திற்கு சென்று புத்தகங்களை படித்து குறிப்பு எடுக்க வேண்டும் என்றும் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும், சுட்டெரிக்கும் வெயிலில் பெற்றோர் துணையின்றி வெளியே செல்லக்கூடாது. நீர் நிலைகளுக்கு பெற்றோர் துணையின்றி செல்லக்கூடாது. இருசக்கர வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக, மதியம் வெயில் அதிகம் உள்ள நேரத்தில் விளையாடுவதைத் தவிர்த்து விட்டு, காலை மற்றும் மாலை நேரத்தில் விளையாட்டில் ஈடுபட வேண்டும். தனித்திறன் வளர்ப்பு பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.