பள்ளி மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கத் தயாரிக்கப்பட்டுள்ள ரோபோக்களை, வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்துவதற்காகத் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பிக்கும் வகையிலும், படைப்பாற்றல் கல்வி போன்ற அணுகுமுறைகள் மூலம் மாணவ-மாணவிகளிடையே கற்கும் ஆற்றலை வெளிப்படுத்தவும் தமிழக அரசின் சார்பில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் artificial intelligence திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் படி, வகுப்பறையில் மாணவர்கள் நுழையும்போதே அவர்களின் முகங்களை வைத்து வருகையினை ரோபோ பதிவு செய்து கொள்ளும். அதன்பின்னர், பாடங்களில் மாணவர் ஏதேனும் கேள்வி கேட்க முற்பட்டால் அவரது பெயரைக் கூறி, சந்தேகத்தைக் கூறுமாறு அந்த ரோபோ டீச்சரே கேட்கும். பின்னர் கேள்விக்குரிய பதிலை மாணவர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக உரியப் பட விளக்கங்களுடன் இந்த ரோபோ கற்பிக்கும்.
வறர்ச்சியடைந்த தொழில்நுட்பங்கள் கொண்ட ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே உள்ள இந்த கல்விமுறையை, தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தத் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களுக்குக் கல்வி பயிற்சி அளிப்பதற்காகத் தனியார் நிறுவனம் ஒன்று ரோபோவை தயாரித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் அந்த ரோபோவை முதலமைச்சரின் முன்னிலையில் இயக்கி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.