சென்னை: தமிழகம் முழுவதிலும் ஹோமியோபதி மருத்துவப் பணியிடங்களை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என்று ஹோமியோபதி மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்திய ஹோமியோபதி மருத்துவச் சங்கத்தின் (சென்னைப் பிரிவு) தேசிய மாநாடு சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இந்திய ஹோமியோபதி மருத்துவச் சங்கத்தின் (சென்னைப் பிரிவு) தலைவர் டாக்டர் வி.வாசுதேவன், செயலாளர் பி.அனந்தராமன், டாக்டர் ஜெயேஷ் சங்வி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளின் ஹோமியோபதி சிகிச்சைப் பிரிவுகளில் சுமார் 500 ஹோமியோபதி மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். ஹோமியோபதி சிகிச்சையை பலர் நாடி வந்து குணம் பெற்றுச் செல்கின்றனர். நாளுக்கு நாள் ஹோமியோபதி சிகிச்சை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
சில அரசு ஆரம்ப சுகாதார மையங்களிலும் ஹோமியோபதி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். எனவே, ஆரம்ப சுகாதார மையங்கள் உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஹோமியோபதி மருத்துவப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். இதனால் ஹோமியோபதி பயிலும் மாணவர்கள் அதிக பயன் பெறுவர். அதைப் போலவே ஏராளமான மக்களும் ஹோமியோபதி சிகிச்சையைப் பெற்று நோய்களைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, இந்த மாநாட்டை இந்திய மருத்துவம்-ஹோமியோபதி மருத்துவத் துறை ஆணையர் மோகன் பியாரே தொடக்கிவைத்தார்.
மாநாட்டில், இந்திய ஹோமியோபதி மருத்துவச் சங்க இணையதளத்தை www.ihma.in ஹோமியோபதி தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ஈஸ்வரதாஸ் தொடக்கி வைத்தார்.