தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை மேலும் இரண்டு நாள்கள் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனவரி 6-ஆம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதியன்று அரையாண்டுத் தேர்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதியன்று தொடங்கியதால் பள்ளிகளுக்கான விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கை பணியானது தொடர்ந்ததால் பள்ளிகள் திறப்பை ஒரு நாள் தள்ளிவைக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பள்ளிக்கல்வித்துறை, அரையாண்டுத் தோ்வு விடுமுறையை மேலும் ஒரு நாள் நீட்டித்து, ஜனவரி 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மூன்றாவது முறையாக அறிவித்துள்ளது.
இதனிடையே, தற்போது பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 6-ஆம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.