தமிழக அரசின் மானிய உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் இந்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை இணையவழி கலந்தாய்வு முறையில் நடத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வரும் ஜூன் மாதம் முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தக் கல்லூரிகளில் சேர்க்கையானது ஒற்றைச் சாளர விண்ணப்பக் கலந்தாய்வு முறையில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த கல்வியாண்டில் 164 அரசுக் கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகளில் சேருவதற்கு 2.4 லட்சம் மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பம் செய்தனர். அதில் தகுதியானவர்களுக்கு கல்லூரிகள் அளவில் கலந்தாய்வு நடத்தப்பட்டு சுமார் 1.07 லட்சம் வரையிலான இடங்கள் நிரப்பப்பட்டன.

இந்நிலையில் அரசுக் கல்லூரிகளைப் போலவே, அரசின் நிதியுதவி பெறும் கல்லூரிகளிலும் இணையவழி கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் 2024-25-ம் கல்வியாண்டில் இருந்து இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் தலைமையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டு திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வரும் கல்வியாண்டு முதல் 171 அரசு மற்றும் 162 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பாணை பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வந்த பின்னர் மே 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
மேலும், நிதியுதவி பெறும் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. நிர்வாக இடங்களே சம்பந்தப்பட்ட கல்லூரிகளே நிரப்பிக் கொள்ளலாம் என்றும் கல்லூரி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்


Click it and Unblock the Notifications












