2013 ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் 82 ஆயிரம் பேர் காத்திருப்பில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பணி வழங்கும் நிலையில் அரசு இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் புதிதாக ஸ்மார்ட் வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
மாணவர்களுக்கு லேப்டாப்
பள்ளி மாணவர்களுக்கு மிக விரைவில் மடிக்கணினி, ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகளைப் பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் மாணவர்கள், சமூக சேவை நிறுவனங்கள் ஏறத்தாழ தமிழகத்தில் 82 கோடி ரூபாய் நிதிகளை வழங்கி, ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வழங்கி வருகிறார்கள்.
இலவச சீருடை
பருவத் தேர்வு விடுமுறைகள் முடிந்து அரசுப் பள்ளிகள் திறந்தவுடனேயே மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. சீருடைகள் வழங்குவதில் சிறிது காலதாமதமாகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் சீருடை வழங்கப்படும்.
கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் கல்விக்காக பிரத்யேகமாக தொலைக்காட்சி கொண்டு வருவதற்கான வேலைகள் முடிவுற்றுள்ளன. அதன் சோதனை ஒளிபரப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் நிறைவுபெற்று ஒளிபரப்பப்படும்.
ஆசிரியர்களுக்கு வேலை இல்லை
ஆசிரியர்கள் பணி நியமனத்தினைப் பொறுத்தவரையில், 2013 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 82 ஆயிரத்து 372 பேர் உள்ளனர். அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் தருவது என்பது அரசின் மூலமாக வாய்ப்புகள் இல்லை என்றார்.
இன்னும் லிஸ்ட் வரல
நீட் தேர்வில் தேசிய அளவில் முதல் 50 இடங்களில் தமிழக மாணவ, மாணவியர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு "தனக்கு இன்னும் புள்ளிவிவரங்கள் வரவில்லை, எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் என்ற புள்ளிவிவரங்கள் பட்டியல் வந்தவுடன் பதிலளிக்கிறேன்" என அமைச்சர் கூறினார்.


Click it and Unblock the Notifications












