சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாகவுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலான 75 காலிப் பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமலேயே உள்ளதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் பல பணிகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம், வேலூர் ஆகிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், தருமபுரி, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
அதேபோல, மாவட்டக் கல்வி அலுவலர் அளவில் 125 பணியிடங்களில் 65 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி, திருச்சி, லால்குடி, அறந்தாங்கி, தூத்துக்குடி, பொன்னேரி, செங்கல்பட்டு பரமக்குடி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும், திருநெல்வேலி, திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்பட மாவட்டக் கல்வி அலுவலர் அளவில் 65 இடங்களும் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளதாகவும், இவற்றை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இந்தப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றனர்.
ஆனால் பல மாதங்களாக இந்த நிலை நீடித்து வருகிறது. இதனால் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு பணிகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.