சென்னை : சட்டசபையில் நேற்று பேசுகையில் வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
நேற்று 22.03.2017 சட்டசபை நேரம் முடிந்ததும் தி.மு.க சார்பில் ராஜேந்திரன் டெல்லி ஜெ.என்.யூ மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதனை சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.
அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளி மாநிலத்திற்கு உயர் படிப்பிற்காகச் செல்லும் மாணவ மாணவியர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறினார.
பாதுகாப்புக்குழு
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் இருந்து உயர்படிப்பிற்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைக் காணப்படுகிறது. எனவே காவல் அதிகாரி மற்றும் கல்வி அதிகாரி கொண்ட குழு ஒன்றினை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
வழக்கு தொடரப்பட்டுள்ளது
டெல்லி ஜெ.என்.யூ மாணவர் முத்துகிருஷ்ணன் அரிசிப் பாளையத்தைச் சார்ந்த ஜீவானந்தம் என்பவரின் மகன் ஆவார். அவரது இறப்புக்குறித்த வழக்கு டெல்லியில் வசந்த விஹார் காவல் நிலையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன் கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை
எய்ம்ஸ் மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் கொண்ட குழுவினால் முத்துக்கிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு அவரின் தந்தை ஜீவானந்தத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மூன்று லட்சம் நிதி உதவி
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ 3 லட்சம் வழங்க ஆணையிட்டுள்ளார்.
உரிய பாதுகாப்பு
எதிர்க்கட்சித்தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க உயர்படிப்பிற்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.