சென்னை: காலியாகவுள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு செவிலியர் நியமனத் தேர்வை ஜூன் 28-ல் நடத்தவுள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் 7,243 செவிலியர் பணியிடங்களில் நியமனத்துக்கானது இந்தத் தகுதித் தேர்வு. முதல் முறையாக தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களும், தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களும் தகுதித் தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

இதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.
மொத்தமுள்ள 7,243 பணியிடங்களில் 6,792 பணியிடங்களுக்கு பெண் செவிலியர்கள் மட்டுமே நியமிக்கப்பட உள்ளனர்.
இந்தத் தகுதித் தேர்வுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய ஐந்து இடங்களில் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in இணையதளத்தைத் தொடர்புகொண்டு அறியமுடியும்.


Click it and Unblock the Notifications












