பள்ளி வளாகத்தில் பயனின்றி உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர்த் தொட்டிகள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் வில்சன் என்னும் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வளாகங்களில் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூடுமாறு, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பள்ளி வளாகத்தில் கட்டிடப் பராமரிப்புப் பணிகள், புதிய கட்டிடங்கள் கட்டும் இடத்திற்கு மாணவர்கள் செல்லத் தடை விதிப்பதுடன், அந்த இடங்களைச் சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட வேண்டும்.
பள்ளி வளாகங்களில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள திறந்தநிலைக் கிணறுகள், நீா்த் தொட்டிகள், பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள், நீா் மற்றும் கழிவுநீா்த் தொட்டிகள், கிணறுகள் ஆகியவற்றை மூடப்பட்டுள்ளதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மூடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், தொட்டிகள் உள்ள இடங்களைச் சுற்றி சிறப்புக் குறியிட்டு, தனியாக அடையாளப்படுத்துவதுடன், அவற்றை தரைமட்டத்தில் இருந்து உயரமாக இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும்.
ஆழ்துளைக் கிணறுகள், நீா்த் தொட்டிகள், ஆறு, ஏரி ஆகியவற்றைக் குறித்து மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவை முறையாகச் செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.