தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 35-ல் இருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மதிப்பெண் அடிப்படையிலேயே 2019-20 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு அந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. மேலும், பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-ல் இருந்து 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பிசி, எம்.பி.சி, பிசி முஸ்லீம் உள்ளிட்ட பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45-ல் இருந்து 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில் இதனை தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த திடீர் உத்தரவால் பொறியியல் படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.