ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் ஒரு மாணவர் படிக்கும் பள்ளிகளுக்குக் கூட மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதால் சுமார் 3000-க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி ஒருங்கிணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் 2018-19 முதல் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் தமிழகத்தில் பள்ளி மானியமாக 31,266 அரசு துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 97 கோடியே 18 லட்சத்து25 ஆயிரம் ரூபாய் வரைவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டது.
இதில், 15 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்களுக்கு மட்டுமே மானியம் வழங்க செப்டம்பரில் ஒப்புதல் கிடைத்தது. இதனால், 28263 பள்ளிகளுக்கே 89 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது.
இதில் 15 முதல் 100 மாணவர்கள் பயிலும் 21,378 பள்ளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், 101 முதல் 250 பேர் பயிலும் பள்ளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய், 251 முதல் ஆயிரம் பேர் வரை பயிலும் கள்ளிகளுக்கு 75 ஆயிரம் ரூபாய், ஆயிரத்திற்கும் மேல் பயிலும் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டன. 15 மாணவர்களுக்கும் கீழ் பயிலும் 3000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மானியம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டது.
தற்போது ஒன்று முதல் 14 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு தலா 12,500 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.