சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 7,243 பணியிடங்களுக்கான தேர்வில் சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வை நடத்த அரசு முடிவு செய்தது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று நடைபெற்ற தேர்வில் சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்றுத் தேர்வை எழுதினர்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு இதுவரை அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதனால் தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் அந்த வேலையைப் பெற முடியாத நிலை இருந்தது. இதையடுத்து அரசு செவிலியர் கல்லூரி மாணவிகளோடு, தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகளையும் தகுதித் தேர்வு அடிப்படையில் அரசுப் பணிக்குத் தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் இதை எதிர்த்து அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களையும் அரசு மருத்துவமனைகளில் நியமிக்க வழி செய்யும் அரசு உத்தரவு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்படி தேர்வு இன்று நடைபெற்றது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 7,243 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. அதில் 6,792 பணியிடங்களுக்கு பெண் செவிலியர்களும், மீதமுள்ள 451 பணியிடங்களுக்கு ஆண் செவிலியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. மொத்தம் 100 மதிப்பெண் கொண்ட இந்தத் தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. தேர்வில் சுமாரர் 40 ஆயிரம் பேர் கலந்துகொண்டு எழுதியுள்ளனர்.