சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட 7,243 நர்ஸ்களுக்கு பணி ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
அவர்கள் அனைவரும் தமிழக அரசின் பல்வேறு மருத்துவமனையில் பணியாற்றுவதற்காக தேர்வு செய்யப்பட்டனர். சென்னை கோட்டையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் இந்த பணி ஆணைகளை 5 நர்ஸ்களுக்கு வழங்கினார்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக நர்ஸ்களைத் தேர்வு செய்யும் தேர்வை மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தியது.
இந்தத் தேர்வாணையம் மூலமாக இதுவரை 5,578 டாக்டர்கள், 1,374 மருத்துவம் சாராப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நர்ஸ்களைத் தேர்வு செய்வதற்காக தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வில் 40,465 பேர் கலந்து கொண்டனர். அதில் 7,243 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நிறைவு பெற்றன. இதையடுத்தே தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகள் முதல்வரால் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்புச் செயலாளர் பி.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் எஸ்.கீதாலட்சுமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.