சென்னை: அரசுக் கல்லூரிகளில் புதிதாக 1,006 உதவிப் பேராசிரியர்களை பணியமர்த்துவதற்கான ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 14 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 62 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 796 புதிய இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் புதிய அரசுக் கல்லூரிகள் மற்றும் புதிய பாடப்பிரிவுகள் துவங்குவதோடு மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் வகையில், உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுப் பணியை மேற்கொள்ளுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆயிரத்து ஆறு நபர்களை அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்துள்ளது.
அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கும் அடையாளமாக 5 பேருக்கு தலைமைச் செயலகத்தில் பணி நியமன உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன், தலைமைச் செயலாளர் கே. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உயர்கல்வித் துறைச் செயலாளர் செல்வி அபூர்வா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பல்வேறு கல்லூரிகளில் காலியாக இருந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.