நடப்பு ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரவித்துள்ளார்.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்த வேண்டாம் என்றும், அதனை ஒத்திவைக்க வேண்டும் எனவும் மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இருப்பினும், இந்த எதிர்ப்புகளுக்கு செவிசாய்க்காத மத்திய அரசு தொடர்ந்து தேர்வுகளை நடத்துவதறகு ஆயத்தமாகி வருகிறது. அதன்படி, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் ஜேஇஇ தேர்வுகள் நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியன்றும் நடைபெறவுள்ளது. இதற்கு நாடு முழுவதும் இருந்து ஜேஇஇ தேர்விற்கு 9.53 லட்சம் மாணவர்களும், நீட் தேர்விற்கு 15.97 லட்சம் மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடப்பு ஆண்டு, நீட் தேர்வில் விலக்கு அளிக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தை நாடுவது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். தமிழக அரசின் உரிமையை விட்டுக் கொடுக்காமல், முதலமைச்சர் சட்ட போராட்டங்களை நடத்தியும், அரசியல் அழுத்தத்தை கொடுத்தும் வருவது போல் நீட் தேர்வு விவகாரத்திலும் நடவடிக்கை மேற்கொள்வார் என அவர் கூறினார்.