தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதியை செப்டம்பர் 30ம் தேதி வரையில் நீட்டித்து கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 87 ஆயிரம் இடங்கள் உள்ளது. இதில், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் 72 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களை நிரப்பிடும் வகையில் தொடர்ந்து சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் உடனடியாக தங்கள் அசல் சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும், நிரப்பப்படாமல் உள்ள மாணவர் சேர்க்கைக்கான இடங்களுக்கு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை சேர்க்கையைக் கல்லூரிகள் நடத்திக் கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.