சென்னை: வருங்காலத்தில் வக்கீல்களாகி சட்ட மேதைகளாக மாறும் எண்ணத்துடன் சட்டப்படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல்தான் இப்போது வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் பட்டியலை இன்று காலை 10 மணி முதல் பல்கலைக்கழக இணையதளத்திலும் மாணவர்கள் காணலாம்.
பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகள், மூன்றாண்டு சட்டப் படிப்புகள், அரசு கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இந்தப் படிப்புகளுக்கான ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களது விண்ணப்பங்களை ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. இன்று காலை 10 மணி முதல் தரவரிசைப்பட்டியலை பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் காண முடியும்.
தரவரிசைப் பட்டியலை காண www.tndalu.ac.in என்ற இணையதளத்தை மாணவர்கள் தொடர்புகொள்ளலாம்.