தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த எதிர்ப்பை அடுத்து 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பழைய தேர்வு முறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாயக் கல்விச் சட்டம்
நாடு முழுவதும் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலிலிருந்து வந்தது. இந்தத் திட்டத்தால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது எனக் கூறிய மத்திய அரசு, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு துறையை அமலில் கொண்டுவந்தது.
தேசியக் கல்விக்கொள்கை
அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு அமைத்திருந்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசியக் கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுவின் வரைவு அறிக்கையும் கடந்த ஆண்டு வெளியானது. அந்த அறிக்கையில், 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் கல்வித் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு 5, 8ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது.
5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு
தொடர்ந்து, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய பொதுத்தேர்வு நடத்தப்படும். அத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு மாதங்களில் மீண்டும் வாய்ப்பளிக்கப்படும். அதிலும் தோல்வியுற்றால் அதே வகுப்பிலேயே அவர்கள் தொடர வேண்டும் என கூறப்பட்டது.
தமிழகத்தில் கடும் எதிர்ப்பு
தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் இந்தத் தேர்வு முறையானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தேர்வு அட்டவணை
8 ஆம் வகுப்பு தேர்வு 2020ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 17ஆம் வரை நடைபெறும். 5-ம் வகுப்பிற்கான தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என பொதுத்தேர்வுக்கான அட்டவணையையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அத்துடன், 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே எழுதலாம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதிகரித்த எதிர்ப்புகள்
மத்திய அரசின் சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த பொதுத் தேர்வு முறையை ஆரம்பம் முதலே தமிழக மக்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்த்துவந்த நிலையில் இன்று (பிப்., 4) நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வது என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறை அமைச்சர் தகவல்
இதனைத் தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு 2019-20ஆம் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவதாக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது எனவும், எனவே, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழைய தேர்வு முறையே தொடரும்" எனவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த முடிவானது தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.