நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையிலும், ஊரடங்கின் காரணமாக மக்கள் பாதிக்கப்படாத வகையிலும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கொரோனா ஊரடங்கின் ஒரு பகுதியாக மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடும் வழிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் முடங்கிய தேர்வுகள்
கொரோனா தொற்றின் காரணமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்த நிலையில் அத்தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இருப்பினும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களை எவ்வாறு கணக்கிடுவது என்பது குறித்து அறிவிப்பு வெளியிடுவதில் குழப்பம் நீடித்து வந்தது.
10, 11ம் வகுப்பு மதிப்பெண் வெளியீடு
இதனிடையே, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12-ம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்ட நிலையில், 12-ம் வகுப்பிற்கான முழு மதிப்பெண்களை கீழ்க்கண்ட வகையில் தமிழக அரசிற்கு வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட மதிப்பெண்
மாணவர், 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 50 சதவிகிதமாக கணக்கிடப்படும்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 20 சதவிகிதமாக கணக்கிடப்படும்.
12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 30 சதவிகிதமாக கணக்கிடப்படும்.
செய்முறைத் தேர்வு மதிப்பெண்
மேலும், 12-ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதில், செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு
கொரோனா, ஊரடங்கு உள்ளிட்ட ஏதேனும் காரணங்களால் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு அவர்களின் 11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
11, 12ம் செய்முறைத் தேர்வு
மேலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்கேற்காத மாணவர்களுக்கு அவர்களின் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.
தோல்வியடைந்த மாணவர்களும் 'பாஸ்'
அதோடு, கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு பங்கேற்காமல் இருந்திருந்தாலோ, அந்த மாணவர்கள் தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருதிக் கொண்டு அவர்களுக்கு 35 சதவிகித மதிப்பெண்கள் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தேர்வு எழுதலாம்
மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், கணக்கீட்டில் மதிப்பெண் குறைவு என கருதும் மாணவர்கள் விரும்பினால் 12ம் வகுப்பிற்கான தேர்வை எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.