12ம் வகுப்பிற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் செய்முறை தேர்வு மதிப்பெண் இல்லாததால், மாணவர்கள் மேற்படிப்பிற்கு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பிற்கான தேர்விற்கு ஏப்ரல் 19ம் தேதியன்று முடிவு வெளியிடப்பட்டது. இத்தேர்வின் தற்காலிக மதிப்பெண்கள் பட்டியல் கடந்த 20ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாணவர்கள் http://www.dge.tn.nic.in/ என்னும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இந்நிலையில், தற்போது 12ம் வகுப்பிற்கான தேர்வின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் செய்முறை தேர்வுக்கான மதிப்பெண்கள் குறிப்பிடப்படாமல் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சுமார் 6 ஆயிரம் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் இந்த பிழை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மொத்தம் 30 மதிப்பெண்களைக் கொண்ட செய்முறை தேர்விற்கான மதிப்பெண்கள் குறிப்பிடப்படாததால், மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
விடுபட்ட மதிப்பெண்கள் நிரந்தர மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிட்டு வெளியிடப்படும் என்றபோதிலும், அந்த நிரந்தர மதிப்பெண் சான்றிதழ் வருவதற்கு குறைந்தது ஒரு மாத காலம் ஆகும் என்பதால் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்து, கலந்தாய்வு தொடங்கி விடும். எனவே, இப்பிரச்சனை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.