தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்த தேர்வினை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு தேர்வுத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குநர் சி. உஷாராணி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடப்பு கல்வியாண்டில் (2019-2020) 10-ம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து உறுதி செய்ய வேண்டும். மேலும், தொடக்க அனுமதி பெற்று முதல் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் புதிய பள்ளிகளும் இது பொருந்தும்.
மேலும், தேர்வு மையங்களாகச் செயல்படவுள்ள அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதில் தவறு நடந்தால் தாங்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும். வரும் ஜனவரி 27-ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் எந்த ஒரு திருத்தமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தேர்வு மையப் பட்டியலில் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட தோ்வு மையங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல், தேர்வு மையப் பட்டியலில் அங்கீகாரம், தொடக்க அனுமதி பெறப்படாத எந்த ஒரு பள்ளியும் இடம்பெறவில்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.