சிறப்பு துணைத் தேர்விற்கான பதிவுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ,துவரையில் அளிக்கப்பட்டு வந்த ஊக்க ஊதியத்தினை தேர்வுத் துறை ரத்து செய்துள்ளது.
10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்து, தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் சிறப்புத் துணைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. மேலும், இதில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களும் பங்கேற்கலாம். இதற்கான ஆன்லைன் பதிவுகள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் இதற்கான சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் சிறப்புத் துணைத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் இந்தப் பள்ளிகளுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றுவது, தேர்வு கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிப்பது, மாணவர்களின் சுய விவரங்களை கணினியில் பதிவு செய்வது போன்ற பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்வர்.
இதில், விடுமுறையில் உள்ள குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் இந்த பணிகளில் சேவை அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக அவர்களுக்கு, விண்ணப்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்கப்படுவது வழக்கம்.
அவ்வாறு இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ஆன்லைன் பதிவுக்காக ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுவதில் ரூ.30 ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்துக்காகவும், ரூ.20 பள்ளிக் கல்வி அலுவலகத்தின் போக்குவரத்து, அலுவலகப் பணிகளுக்கும் ஒதுக்கப்படும்.
இந்நிலையில், மாணவர்களிடம் வசூலிக்கும் ஆன்லைன் கட்டணத்தை முழுமையாகத் தேர்வுத் துறைக்கு செலுத்த வேண்டும் என தேர்வுத் துறை இயக்ககம் திடீரென உத்தரவிட்டுள்ளது.
இதனால் விடுமுறை நாள்களில் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வுத் துறையின் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்து விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் அரசு தேர்வு மையங்களின் பணிக்கு வர மறுத்துள்ளதால், பல மையங்களில் தலைமை ஆசிரியர்களே அமர்ந்து தேர்வு பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.