சென்னை: சென்னையைச் சேர்ந்த 3 ஆங்கில ஆசிரியர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விருதுகளைத் தட்டி வந்து சாதனை படைத்துள்ளனர்.
சென்னை வண்டலூரிலுள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர்கள் கேத்தரின் அன்ன புஷ்பம், பி. ரத்னா, ஹிந்துஸ்தான் பல்கலைகக்ழகத்தைச் சேர்ந்த ஆனந்தன் பாலகிருஷ்ணன் ஆகியோர் அந்த விருதுகளைப் பெற்ற ஆசிரியர்கள் ஆவர்.
கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி மதிப்பீடு என்ற போட்டியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில் கலந்துகொண்ட 3 பேரும் போட்டியில் வெற்றி பெற்று விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளனர்.
இதில் கேத்தரின் அன்னபுஷ்பம் முதலிடத்தையும், ஆனந்தன் பாலகிருஷ்ணன் 3-ம் இடத்தையும் பெற்றனர்.
துணைப் பேராசிரியர் ரத்னாவுக்கு கூட்டுப் பிரிவில் விருது கிடைத்தது. இவர்களுக்கு தெற்காசிய கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி மதிப்பீட்டுப் பிரிவின் இயக்குநர்(செயல்பாடு) ஏஞ்சலா பிரெஞ்ச் விருதுகளை வழங்கி கௌரவித்தார். அண்மையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது.