பள்ளியில் லீவு லெட்டர் எழுதுவது என்றாலே உடல் நிலை சரியில்லை, உறவினர் திருமணம் என எழுதுவதைத் தான் வழக்கமாகக் கொண்டிருப்போம். ஆனால், இங்கே ஒரு மாணவர் எழுதிய வித்தியாசமான விடுமுறைக் கடிதம் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருபவர் தீபக். படிப்பிலும் சரி, ஆசிரியர்கள் மத்தியிலும் சரி மாணவன் தீபக் சிறந்த மாணவனாகவே வலம் வருபவர் என்கின்றனர் அவரது நண்பர்கள்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு விடுப்பு எடுத்த தீபக், அதற்கான விடுமுறைக் கடிதத்தை ஆசிரியரிடம் வழங்கிவிடுமாறு சக மாணவர் ஒருவரிடம் கடிதத்தைக் கொடுத்துள்ளார். அங்கு தான், ஆசிரியருக்கு ஓர் அதிர்ச்சியான சாக் காத்திருந்தது.
அப்படி என்னதான் அந்தக் கடிதத்தில் இருந்தது? இதற்காக அந்த மாணவன் தனது வகுப்பு ஆசிரியருக்கு அனுப்பிய விடுப்புக் கடிதத்தில், "நாள் நேற்று ஊரில் நடந்த கபடி போட்டியை இரவு முழுவதும் கண் விழித்துப் பார்த்ததால் உடல் சோர்வாக உள்ளது. எனவே தனக்கு ஒரு நாள் விடுப்பு வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார் மாணவர் தீபக்.
விடுமுறைக்காக ஏதேதோ பொய்கள் கூறிவரும் மாணவர்களின் மத்தியில் இப்படி ஒரு நேர்மையான மாணவனா? என வியப்படைந்த ஆசிரியர் மணிமாறன், அந்தக் கடிதத்தைத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதியவே அனைத்துத் தரப்பினரும் மாணவனின் நேர்மையை வரவேற்றுப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.