திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் எஸ்.பி.யின் சகோதரர் வைத்திநாதன், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 37-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இவர் தற்போது சென்னை டாக்டராக பணிபுரிந்து வருகிறார். புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் ஆர்.வைத்திநாதன். இவரது தந்தை ராமலிங்கம், கடலூர் நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். தாயார் வசந்தி. வைத்திநாதன் காரைக்காலில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர். தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளநிலை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் வைத்திநாதன்.
ஐஏஎஸ் தேர்வுகளில் ஆர்வம் கொண்டு அதற்காக தீவிரமான பயிற்சி எடுத்து வந்து எழுதினார்.
தற்போது வெளியான தேர்வு முடிவுகளில் வைத்திநாதன் அகில இந்திய அளவில் 37-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மேலும் தமிழகம், புதுவை மாநில அளவில் அவர் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இவரது சகோதரி பொன்னி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பணியாற்றி வருகிறார்.
இதுகுறித்து வைத்திநாதன் கூறியதாவது: சமூகவியல் பாடத்தை குடிமைப் பணிகள் தேர்வில் முதன்மைப் பாடமாக எடுத்து படித்து வெற்றி பெற்றுள்ளேன். மூன்றாவது முறையாக நடந்த நேர்காணலில் நான் வெற்றி பெற்றேன்.
எனது சகோதரி பொன்னி ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். எனக்கும் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருந்தேன். இதற்காக கடினமாக உழைத்து பயிற்சி மேற்கொண்டேன். வெளிப்படையான நிர்வாகம், அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது, மக்களை தோழமையுடன் நடத்துவது போன்றவை எனது இலக்காகும். இப்போது டாக்டராக மக்கள் சேவையாற்றி வருகிறேன்.
பணியில் அமர்ந்ததும் சமுதாயத்துக்காக தொடர்ந்து சேவையாற்றுவேன் என்றார்.