சமீபத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக தற்போது உயர்த்தப்பட்ட தொகையிலிருந்து பகுதி அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கான தேர்வுக்கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதன்படி, இளநிலை படிப்பிற்குத் தாள் ஒன்றுக்கு ரூ. 68-லிருந்து ரூ.100-ஆகவும், முதுநிலைப் படிப்புக்கு ரூ.113-லிருந்து ரூ.160-ஆகவும் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
பல்கலைக் கழகத்தின் இந்த கட்டண உயர்வு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு பெரும் சுமையாக அமையும் என்பதால், கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வுக் கட்டணத்தை பகுதி அளவுக்கு குறைத்துள்ளதாக அப்பல்கலைக் கழக பதிவாளர் (பொ) பெருவழுதி கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதாவது, இளநிலை படிப்புக்கான தேர்வுக் கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.90-எனவும், முதுகலை படிப்புக்கான தேர்வுக் கட்டணம் ரூ.160-லிருந்து ரூ.145-எனவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், செய்முறைத் தேர்வு உள்பட பல்வேறு பிரிவுகளுக்கான தேர்வு கட்டணங்களும் உயர்த்தப்பட்ட தொகையிலிருந்து பகுதியளவு குறைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு திருவள்ளுவர் பல்கலைக்கழக இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.