சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் உள்ள காலியிடங்களை நிரப்ப 3-ம் கட்டக் கவுன்சிலிங் செப்டம்பர் 26-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கவுன்சிலிங் இரண்டு தினங்களாக நடைபெறும் என்று மருத்துவக் கல்வித் தேர்வுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இரண்டு கட்டக் கவுன்சிலிங் நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டு விட்டனர். அவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கப்பட்டு விட்டன. எனினும், இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டு உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக ஏற்படுத்தப்பட உள்ள 27 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்படும் எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியிலிருந்து தமிழக ஒதுக்கீட்டுக்குச் சமர்ப்பிக்கப்படும் 65 எம்.பி.பி.எஸ். இடங்கள், பி.டி.எஸ். காலியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப வரும் 26, 27 ஆகிய தேதிகளில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் கவுன்சிலிங் நடத்தப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செய்து வருகிறது.