சென்னை ; போலீஸ் வேலைக்கு கடந்த 2012ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சமீபத்தில் போலீஸ் துறைக்கு 13 ஆயிரத்து 137 இரண்டாம் நிலை காவல்களும், சிறைத்துறைக்கு 1,015 இரண்டாம் நிலை காவலர்களும், தீயணைப்பு துறைக்கு 1,512 வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டது.
33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தால் 1 லட்சத்து 30 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். திருநங்கைகளிடம் இருந்தும் விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இத்தேர்வுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 6 லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பம் அனுப்பியவர்களில் 5 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டன.
தேர்வுக்கான ஏற்பாடுகள்
தமிழகம் முழுவதும் இதற்கான எழுத்துத் தேர்வு 140 மையங்களில் நேற்று நடந்தது. சென்னையில் 56 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வில் 80 மதிப்பெண்களுக்கு 80 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. சென்னையில் தேர்வு பணியை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். தேர்வு கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருந்த துணை கமிஷனர் ராதிகா தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
20 சதவீதம் பேர் தேர்வுக்கு வரவில்லை
தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் வரவில்லை. இளைஞர்களும், இளம்பெண்களும், திருநங்கைகளும், ஆர்வமாக வந்து தேர்வில் கலந்து கொண்டனர். கர்ப்பிணிகளும் தேர்வு எழுதினர். கைக்குழந்தையோடு தேர்வு மையத்துக்கு வந்த பெண்கள் தங்கள் குழந்தைகளை பெற்றோரிடமும், கணவரிடமும் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர். போன் கைப்பை போன்றவை கொண்டு செல்ல தடைவிதிக்கப்ட்டது. ஹால் டிக்கெட் மற்றும் உரிய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
திருநங்கை தேர்வு எழுதினார்
தேர்வில் மொத்தம் 20 திருநங்கைகள் ஆர்வமாக கலந்து கொண்டனர். சென்னை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் கண்ணகி நகரை சேர்ந்த துர்காஸ்ரீ (வயது 24) என்ற திருநங்கை தேர்வில் கலந்து கொண்டனர். அவர் தேர்வு எழுதி விட்டு வெளியே வந்து ஏற்கனவே திருநங்கை ஒருவர் பெண் சப்இன்ஸ்பெக்டராக தேர்வாகி உள்ளார். இதனால் எனக்கும் போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. தற்போது அஞ்சல் வழியில் பி.ஏ படித்து வருகிறேன். கண்ணகி நகர் போலீசார் எழுத்து தேர்வு எழுத எங்களுக்கு கடந்த ஒரு மாதமாக பயிற்சி கொடுத்தனர். நான் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிகைக உள்ளது என்றார்.
தேர்வு முடிவு
தேர்வு எழுதியவர்கள் தேர்வு எளிதாக இருந்து எனவும், உளவியல் சம்பந்தப்பட்ட கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாகவும் கூறினர். சீருடை தேர்வாணைய அதிகாரிகள் தமிழகம் முழுவதும் இருந்து சீல் வைக்கப்படட விடைத்தாள்கள் சென்னைக்கு கொண்டுவர குறைந்தது 4 நாட்கள் ஆகும் என தெரிவித்தனர். அதன் பிறகு விடைத்தாள்களை பிரித்து கம்ப்யூட்டர் மூலம் திருத்தும் பணி நடக்கும். எழுத்து தேர் முடிவுகள் வெளியாக ஒரு மாதம் ஆகலாம். தேர்வு முடிவு வெளிவந்த விறகு உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். எழுத்து தேர்வில் ஒரு பதவிக்கு 5 பேர் வீதம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.