சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவில், ஒவ்வொரு ஆண்டும், கொங்கு மண்டலம் அல்லது தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களை விட அதிக தேர்ச்சி பெறுவது வாடிக்கையாகிவிட்டது. தலைநகர் சென்னையிலும் மற்ற வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் சரிந்து வருகிறது.
இந்த ஆண்டு, அரசு பள்ளிகள் தேர்ச்சியில், சென்னைக்கு அருகிலுள்ள, திருவள்ளூர் மாவட்டம், 74.36 சதவீத தேர்ச்சியில், கடைசி இடத்தில் உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், எந்த ஒரு அரசு பள்ளியும், 100 சதவீத தேர்ச்சி பெறவில்லை.
அதே போல, கடலுாரில் ஒரே ஒரு பள்ளி தான், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு பள்ளிகள் ஒட்டு மொத்தமாக, 86.87 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. விழுப்புரம், 82.58; திருவண்ணாமலை, 89.31; வேலுார், 80.32 என, தேர்ச்சி சதவீதம், மற்ற மாவட்டங்களை விட குறைவாக உள்ளது.
குறைவான தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்
அனைத்து வகை பள்ளிகளுக்கான, சராசரி தேர்ச்சி விகிதத்தில், விழுப்புரம், கடலுார், வேலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, அரியலுார் ஆகிய மாவட்டங்கள், 90 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியே பெற்று உள்ளன.
பல குழப்பங்கள்
வட மாவட்டங்களில், ஆசிரியர்கள் சரியாக வேலைக்கு செல்வதில்லை. சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பயந்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை; பல பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதில்லை; கற்பித்தல் முறைகளில் பல குழப்பங்கள் உள்ளன.
அதிகாரிகளின் அலட்சியப் போக்கு
வட மாவட்ட கிராமப் பகுதி மாணவர்களுக்கு, தற்போதைய கல்வித் தரம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், அவர்களை கூலிகளாக வைக்க, பலர் முயற்சிக்கின்றனர். இதன் விளைவாக, மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்புகளுக்கு வரும் நாட்கள் மிக குறைந்துள்ளது. இது போன்று ஏராளமான பிரச்னைகள் உள்ளன. சென்னையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை, அதிகாரிகள் கண்டுகொள்வதே கிடையாது.
பெற்றோர்களின் குற்றச்சாட்டு
கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும். மேலும் பெரும் நகரங்களில் கல்வி என்பது வியாபார நோக்கத்தோடு மட்டுமே பார்க்கப்படுவதால் தரமான கல்வி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது பெற்றோர்களின் குற்றச்சாட்டு.


Click it and Unblock the Notifications












