சென்னை : இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பள்ளியில் சேருவதற்காக விண்ணப்பிக்க மேலும் அவகசம் வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்களின் நலன் கருதி இன்று மே 18ந் தேதியோடு முடிய இருந்த கால அவகாசத்தை மே 26ந் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க விரும்புபவர்கள் மே 26ந் தேதி வரை இ-சேவை மையங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
கட்டாயக் கல்விச்சட்டம்
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுய நிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டிடல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இணையதள வசதி
2017-2018ம் கல்வியாண்டு முதல் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க அரசால் ஆணையிடப்பட்டது. இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
காலஅவகாசம் நீட்டிப்பு
இச்சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க மே 18ந் தேதி இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கான காலவரையறையை 26ந் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. ஏற்கனவே முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்டக் கல்வி அலுவலர் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வழி காட்டுதலின்படி சமுதாயத்தில் நலிவடைந்த வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












