சென்னை : அரசு, தனியார் பள்ளிகளில் கடந்த வியாழக்கிழமை தேதி ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின. பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பாதிக்கப்படும் என்பதால், டல்லாக படிக்கும் மாணவர்களை வடிகட்டி பள்ளிகள் கட்டாயமாக வெளியேற்ற உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுபோன்று டிசி கொடுத்து வெளியேற்றும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் மாணவர்கள் புகார் அளிக்கலாம் என்று கல்வி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதில், 50 சதவீதத்திற்கு குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களின் பட்டியலை, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் தயாரித்துள்ளன. அவர்களுக்கு, டி.சி எனப்படும், மாற்று சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
அந்த மாணவர்கள், மற்ற பள்ளிகளிலும் சேர முடிவதில்லை. எனவே, இந்த பிரச்னைக்கு, பள்ளிக் கல்வித்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டால், மாணவர்கள், உடனே தங்கள் பெற்றோருடன் சென்று, பள்ளிக் கல்வி அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.
சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள, பள்ளிக் கல்வி செயலர் அலுவலகம், நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகம்; சைாதாப்பேட்டை, பனகல் மாளிகையிலுள்ள, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் புகார் அளிக்கலாம். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், புகார் மனு அளிக்கலாம் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கற்றல் திறன் குறைபாடு உள்ள மாணவ மாணவியர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே சிறப்புவகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அவர்கள் மேல் பள்ளி நிர்வாகம் கூடுதல் அக்கறை எடுத்து அவர்களையும் நல்ல மாணவர்களாக உருவாக்க வேண்டும். அதைச் செய்யாமல் பள்ளி நிர்வாகம் சுமாராக படிக்கும் மாணவர்களுக்க டிசி கொடுக்க கூடாது என்பது பெற்றோர்களின் கோரிக்கையாகும்.