சென்னை : கடந்த மார்ச் மாதம் 2ந் தேதி பிளஸ்2 தேர்வு தொடங்கி மார்ச் 31ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்களை விட 62,843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினார்கள். பள்ளி மாணவர்களைத் தவிர தனித் தேர்வர்களும் எழுதினார்கள்.
மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதிவிட்டு முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். நாளை காலை 10 மணிக்கு டி.பி.ஐ வளாகத்தில் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய 3 இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ்
மேலும் 15ந் தேதி முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விபரங்களை அளித்து இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 17ந் தேதி முதல் பள்ளியில் இருந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகல்
பிளஸ்2 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளிக்கூட மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கூடங்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் நாளை முதல் 15ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாள் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறு கூட்டல் செய்ய வேண்டுமா என்பதை தெளிவாக முடிவு செய்து விட்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மதிப்பெண் மறுகூட்டல்
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கு மதிப்பெண் மறு கூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். மறுகூட்டல் முடிவுகளையும் தெரிந்து கொள்ள முடியும்.
சிறப்புத் துணைத் தேர்வு
நடைபெற்று முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வு எழுத பதிவு செய்து தேர்ச்சி பெறாதோருக்கும் வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
தைரியாக முடிவை எதிர்கொள்ளுங்கள்
நாளை வரவிருக்கும் தேர்வு முடிவினை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வெற்றி, தோல்வி மற்றும் நன்மை, தீமை, சந்தோசம், துக்கம் என்ற இரண்டு வட்டத்திற்குள் மாறி மாறி சுற்றி வருகிறது. சந்தோசமும் நிரந்தரமில்லை துக்கமும் நிரந்தரமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது. நம் வாழ்வில் நடைபெறும் மாற்றங்களை நாம் நல்லதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்- தீமையையும், நன்மையையும் தைரியமாக எதிர்கொள்கின்ற மனநிலை எவர் ஒருவருக்கு இருக்கிறதோ அவரே வாழ்வின் உண்மையான வெற்றியாளர். எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. அந்த தீமைக்குள் இருக்கும் நன்மையைக் கண்டறிந்து தீமையை நன்மையினால் வெல்லுங்கள்.