சென்னை : வரும் கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கே பதக்கமும் பரிசும் வழங்கப்பட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் 102ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்து மாநில அளவில் ரேங்க் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வில், ரேங்க் பெறும் மாணவர்களுக்கு, முதல்வர் பரிசு வழங்கி பாராட்டுவார். 2010ம் ஆண்டு வரை தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டுமே, இந்த பரிசு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், 2011ல் அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.அதனால், பரிசு மற்றும் பதக்கத்துக்கு, தனியார் பள்ளி மாணவர்களும், ஆங்கில வழி மாணவர்களும், அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரசு பள்ளியில், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள், பெரும்பாலும், மாநில, மாவட்ட ரேங்க் பெறுவதில்லை.மாநில அரசின் பரிசும், பதக்கமும், தனியார் பள்ளி மாணவர்களுக்கே கிடைக்கும் நிலை ஏற்பட்டது. இந்த முறைக்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன.
அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழி மாணவர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல், மாநில, மாவட்ட ரேங்குக்கான பரிசுகளை, அரசு பள்ளியிலும், தமிழ் வழியிலும் படிக்கும் மாணவர்களுக்கே வழங்கலாம் என, அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அரசு பள்ளியில், தமிழ் வழி அல்லது ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், பரிசு வழங்குவதா அல்லது அரசு பள்ளியிலோ, தனியார் பள்ளியிலோ, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பரிசு தருவதா என, ஆய்வுகள் நடந்து வருகின்றன.
தமிழக அரசு வழங்கும் பரிசும் பதக்கமும், அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக் வழங்கப்படுவதுதான் சரியாக இருக்கும் என்பது பலரின் கருத்தாகும். தமிழ் வழியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களை ஊக்குவிப்பதற்கு இது சிறந்த வழிமுறையாகும்.