சென்னை : நீட் தேர்வின்போது, மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன விவகாரத்தில், மனித உரிமை ஆணையம் சி.பி.எஸ்.இ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான நீட் கடந்த 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ ஆணையம், முறைகேடுகளைத் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
வட மாநிலங்களில் உள்ள மாணவர்கள் சுதந்திரமாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில் தென் மாநிலங்களில் உள்ள மாணவ மாணவியர்கள் தேர்வுக்கு முன்பாக சோதனை என்ற பெயரில் கடுமையான மன உளச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர்.
மாணவர்கள் கடும் பாதிப்பு
முழுக்கை சட்டை அணிந்தவர்கள் சட்டையை கிழித்துக் கொண்டு தேர்வு எழுதியது. பெண்களின் ஹெர்பின் முதற்கொண்டு கழட்டப்பட்டு தலைவிரிக் கோலமாக தேர்வு எழுதியது இதுதான் முதல் முறையாகும். இதனால் மாணவ மாணவியர்கள் கடும் வேதனைக்குள்ளானார்கள்.
கேரளா மாணவி
இதனிடையே, நீட் தேர்வின்போது கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், தேர்வு எழுதவந்த மாணவியின் உள்ளாடையை அகற்றுமாறு கண்காணிப்பாளர் உத்தரவிட்டது, நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு விளக்கம் அளித்த சி.பி.எஸ்.இ, சில கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட ஆர்வமிகுதியால் இவ்வாறு நடந்துவிட்டது' என்று குறிப்பிட்டது.
நான்கு வாரத்திற்குள் பதில்
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் சி.பி.எஸ்.இ-க்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, நான்கு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடினமான வினாத்தாள்
நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானால் அதை சமாளிப்பதற்காக ஒரே மாதிரியான விடை கொண்ட ஒன்றுக்கும் மேற்பட்ட வினாத்தாள் தொகுப்புகள் தயாரிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு தயாரிக்கப்பட்டவற்றில் எளிமையான வினாத்தாள்கள் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வினியோகிக்கப்பட்டுள்ளன. கடினமான வினாத்தாள்கள் தமிழ் நாடு உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வினியோகிக்கப்பட்டன. இதனால் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் என்பது மட்டும் உண்மை.
கிராமப் புற மாணவர்கள்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மருத்துவம் மற்றும் பல் மருத்தவ மாணவர் சேர்க்கை நடைபெற்றால் தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப் பேரைவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள சட்டத்திற்கு மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியின் ஒப்புதல் விரைவில் கிடைக்க வேண்டும் என பல அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.