சென்னை : மருத்துவ படிப்பிற்கான இடஒதுக்கீட்டில் மெத்தனமாக இருந்ததற்காக உயர்நீதி மன்றம் தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் தெரிவித்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்களில் 50% இடஒதுக்கீடு அரசுக்கு வழங்க வேண்டும் என மருத்துவர் காமராஜ் உள்ளிட்டோர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் வரும் கல்வியாண்டில் இருந்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்களில் 50% இடஒதுக்கீடு அரசுக்கு வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.
தனியார் மற்றும் நிகர்நிலைபல்கலைகளில் உள்ள 50% இடங்கள் அரசுக்கு சரியாக ஒதுக்கப்படுகிறதா அதனை அரசு கண்காணிக்கிறதா என உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதனைக் கண்காணிப்பதற்காக குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
உயர்நீதி மன்றம் கவுன்சிலிங் விபரங்கள் மற்றும் இடஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை போன்றவை குறித்த விபரங்களை 2000 வருடத்தில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இட ஒதுக்கீடு மற்றும் கவுன்சிலிங் விபரங்களை இணைதளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்த 50% இட ஒதுக்கீடு பொருந்தாது என உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்லூரிகளின் தரம், மாணவர்களின் விபரங்கள் மற்றும் கல்லூரி சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களையும் கல்லூரி நிர்வாகம் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சில கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் கல்லூரியில் இல்லாத வசதிகளையெல்லாம் இருப்பதாக கூறுவதினால் மாணவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதை தவிர்ப்பதற்காக கல்லூரி விபரங்கள் அனைத்தும் தெளிவாக இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் 50% இடஒதுக்கீட்டில் மெத்தனமாக நடந்து கொண்டதற்காக உயர்நீதி மன்றம் ஒரு கோடி ரூபாய் அபராதம் அளித்துள்ளது. இந்த ஒரு கோடி ரூபாயை கீழடி அகழ்வாராய்ச்சிக்கு வழங்க தமிழக அரசுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.