சென்னை : பள்ளிக்குழந்தைகளின் புத்தகச்சுமை பெரும்சுமையாக பெற்றோர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதற்காக மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இந்த வருடமாவாது நடைமுறைக்கு கொண்டுவரப்படுமா என பெற்றோர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
புத்தகச் சுமை என்பது குழந்தைகளை அப்படியே நசுக்கிறது. அவர்களின் நிமிர்ந்த நடை மற்றும் நேர் கொண்ட பார்வை ஆகியவைகள் புத்தகச்சுமையின் அழுத்தத்தினால் காணாமல் போகிறது.
நர்சரி பள்ளி மாணவர்கள் முதல் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் வரைக்கும் அனைவருக்குமே புத்தகச்சுமை என்பது அவர்களை அதிக அளவில் பாதிக்கும் ஒன்றாகவே அமைகிறது.
முதுகு வளையும் புத்தகச்சுமை
மாணவ மாணவியர்கள் புத்தகச்சுமையினால் மனதளவிலும் உடல் அளவிலும் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைப் பருவத்திலேயே அவர்கள் முதுகு வளையும் வரை புத்தகத்தைச் சுமப்பதால் வயதாகும் போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடக் கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மெட்ரிக் பள்ளி இயக்குநர் உத்தரவு
கடந்த வருடம் நவம்பர் மாதம் மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பாடபுத்தகச்சுமை குறைக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அதில் அதிக அளவில் எடையுடன் கூடிய புத்தகப்பையை மாணவர்கள் சுமந்து செல்வது தவிர்க்கப்பட வேண்டும். மாணவர்கள் தங்களின் எடையில் இருந்து 10% வரை கூடுதல் எடை உடைய புத்தப்பையை சுமக்கலாம். அதற்கு மேல் சுமை தவிர்க்கப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் அறிவுரை
பால்வாடிக்குச் செல்லும் குழந்தைகள் புத்தகப்பையை எடுத்து செல்வதைத் தவிர்கக வேண்டும்.
டைம்டேபிள் படி மட்டுமே மாணவ மாணவியர்கள் புத்தகங்களை எடுத்து வர வேண்டும் என ஆசிரியர்களால் மாணவ மாணவியர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். மேலும் இதனை மெட்ரிக் பள்ளிகள் பின்பற்றுகின்றனவா என பள்ளி ஆய்வாளர்கள் கண்காணிக்க் வேண்டும் என மெட்ரிக் பள்ளி இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.
முப்பருவ கல்வி முறை
பாடப்புத்தகங்களை புரிந்து படிப்பதோடு புத்தகச்சுமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் 2012 - 2013ம் ஆண்டு முதல் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்பதனை மெட்ரிக் பள்ளி இயக்குனர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெற்றோர்களின் கோரிக்கை
மெட்ரிக் பள்ளி இயக்குனர் பிறப்பித்த உத்தரவு இந்த வருடத்தில் இருந்தாவது கட்டாயம் நடைமுறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். காகிதத்தில் உள்ள உத்தரவு செயல் முறையில் வரவேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
பெற்றோர்களின் குற்றச்சாட்டு
மெட்ரிக்பள்ளி இயக்குநனரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பள்ளிகள் பின்பற்றுவதில்லை என பெற்றோர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் அதிகச் சுமைக் கொண்ட புத்தகப்பையை சுமந்து செல்வதைப் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக உள்ளது என பெற்றோர்கள் கூறுகின்றனர். மேலும் சில பள்ளிகளில் டைம்டேபிள் படி பாடம் நடத்தாமல் அனைத்து நோட் புத்தகங்களையும் தினமும் கொண்டு வரச் சொல்கிறார்கள் எனவும் சில பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.
புத்தகச்சுமை குறைக்க வழிகள்
தினசரி டைம் டேபிள்படி நோட் புத்தகங்களை கொண்டு வருவதற்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும் பெற்றோர்களும் தினசரி டைம்டேபிள் படி நோட் புத்தகங்களை குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்ப வேண்டும். ஒரு ஆசிரியர் விடுப்பு எடுக்கும் போது அதற்குப் பதிலாக வரும் மற்றொரு ஆசிரியர் டைம் டேபிள் படியே பாடங்களை நடத்த வேண்டும். இவ்வாறு செய்தால் புத்தகச்சுமையை குறைக்க முடியும் என தமிழ் நாடு தனியார்ப் பள்ளிகள் சங்கத்தலைவர் விசாலாட்சி கூறினார்.


Click it and Unblock the Notifications












