நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை உலக அளவில் மேம்படுத்த இன்ஸ்டிடியூசன்ஸ் ஆஃப் எமினென்ஸ் என்ற திட்டத்தை மத்திய அரசு 2017-ம் ஆண்டு கொண்டு வந்ததை அடுத்து அதற்கான கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து வருகிறது.
இந்நிலையில் அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து வழங்க ஏதுவாக கல்வி நிறுவனத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

உலக அளவில் உயர் கல்வி நிறுவனம்
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்களை உலக அளவில் மேம்படுத்த இன்ஸ்டிடியூசன்ஸ் ஆஃப் எமினென்ஸ் என்னும் திட்டம், மத்திய அரசின் சார்பில் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தின்படி 10 உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்து அவற்றின் மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி வழங்கப்படும்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகம்
இத்திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகமும் தேர்வானது. இதனிடையே, இட ஒதுக்கீடு உட்பட சில காரணங்களால் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைப்பதில் தாமதம் நிலவி வந்தது.

அமைச்சரவைக் கூட்டம்
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக கடந்த நவம்பர் 19-ம் தேதியன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக அரசின் 69 சதவிகித இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு உறுதி அளிக்கும் பட்சத்தில் சிறப்பு அந்தஸ்துக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறை சார்பில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டது.

தமிழக அரசுக்குக் கடிதம்
இதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதால் மாநில அரசு பின்பற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் தொடரும் என்று மத்திய அரசு உறுதியளித்து தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இரண்டாகப் பிரியும் அண்ணா பல்கலை.,
இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க ஏதுவாக கல்வி நிறுவனத்தை இரண்டாகப் பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய 5 அமைச்சர்களைக் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை வெளியீடு
இதுகுறித்து, உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்த நவம்பர் 19-ம் தேதியன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சட்டம் 1978 மற்றும் புதுச்சட்டம் திருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது.

ஐந்து அமைச்சர்கள் கொண்ட ஆய்வுக் குழு
இத்திட்டத்தின் படி, அண்ணா உயர் சிறப்பு கல்வி நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் என்று இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயச் சிறப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் இடம் பெறுவர். இதுதவிர நிதித்துறை, சட்டத்துறை, உயர்கல்வித் துறை செயலர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஒரு பகுதிக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து
மேலே குறிப்பிட்டதைப் படி, இரண்டாகப் பிரிக்கப்படும் பகுதியில் தற்போது இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்படும். அதன்பின் அதற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு அது தனியாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியாருக்குத் தனி அண்ணா பல்கலை
பிரிக்கப்பட்ட பல்கலையின் மற்றொரு பகுதி தனியாக இன்னொரு பல்கலைக்கழகமாகத் தொடங்கப்படும். அதற்கு கீழ் மற்ற தமிழக பொறியியல் கல்லூரிகள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை இன்னொரு பல்கலைக்கழகம் மேற்கொள்ளும்.