புதுடெல்லி : சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கருணை மதிப்பெண் விவகாரத்தால் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மார்ச் 12ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுதினர்.
சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் சுமார் 61 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
சிபிஎஸ்இ அறிவிப்பு
மே 19ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று மே 24ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் முறையை சிபிஎஸ்இ ரத்து செய்வதாக அறிவித்தது.
நீதி மன்ற தீர்ப்பு
இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் அதை ரத்து செய்வது நியாமற்ற செயல் என உத்தரவிட்டனர்.
சிபிஎஸ்இ இயக்குநர், பிரகாஷ் ஜவடேகரைச் சந்திக்கிறார்
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்காக இன்று பிற்பகலில் சிபிஎஸ்இ இயக்குநர் சதுர்வேதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரைச் சந்திக்கிறார்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவு இன்று வெளியாகாது
வழக்கமாக சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே www.cbse.nic.in , www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால், இதுவரை அத்தகைய அறிவிப்பு ஏதும் வெளியாகாததால் சிபிஎஸ்இ தேர்வு முடிவு இன்று வெளியாக வாய்ப்பில்லை என்றே உறுதியாகத் தெரிகிறது.