சென்னை: பிளஸ் 1 பாடத்திட்டம் 2016&17ம் கல்வி ஆண்டிலும், பிளஸ் 2 பாடத்திட்டம் 2017-2018ம் கல்வி ஆண்டிலும் மாற்றி அமைக்கப்படுகிறது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கு பிறகு பிளஸ் 1, பிளஸ் 2 முறை கடந்த 1978-1979ம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டில் பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி வீதம் 38 சதவீதமாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது 90 சதவீதத்தை எட்டியுள்ளது.
அரியர்ஸ்...
ஆனால் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர் கல்விக்கு வரும் போது திறமையற்றவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக பொறியியல் படிக்கும் மாணவ மாணவியர் அதிக அளவில் அரியர்ஸ் வைக்கும் நிலையில் உள்ளனர். பொறியியல் பாடங்களை படிக்க திணறுகின்றனர்.
பாடங்களில் குறை
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் உயர்கல்வி படிப்பதற்கு ஏற்ப பிளஸ் 2 பாடங்கள் இல்லை என்று ஆய்வில் தெரியவருகிறது.
புதிய தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய பாடங்களை பிளஸ் 2 வகுப்புகளில் படித்தால் தான் உயர்கல்வியில் மாணவர்களால் எதிர்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய பாடத் திட்டம்
இதையடுத்து நவீன தொழில் நுட்பங்கள் அடங்கிய பாடத்திட்டத்தை கடந்த 2014ம் ஆண்டு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் தயாரித்தது.ஆனால் அதற்கு இதுவரை தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை.
அடுத்த கல்வியாண்டிலிருந்து...
இந்த பாடத் திட்டம் கல்வியாளர்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் அமல்படுத்தப்படவில்லை. இதையடுத்து 2016 ம் கல்வி ஆண்டில் அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி பிளஸ் 1 வகுப்புக்கு வரும் கல்வி ஆண்டிலும், பிளஸ் 2 வகுப்புக்கு 2017 - 2018ம் கல்வி ஆண்டிலும் அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புத்தகங்கள் அச்சடிக்கும் பணி ஜூன் மாதத்துக்கு பிறகு தொடங்கும் என்று தெரிகிறது.