டெல்லி: பத்து, பனிரெண்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்காக பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இது அடுத்த கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களாகும். இதுதொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண் இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன் கூறியதாவது:
வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான 82 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவை பள்ளிகளுக்கும், தனியாக விண்ணப்பித்துப் பெறும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தப் புத்தகங்களைப் பெறுவதற்கு 10,900 தனியார் பள்ளிகள் இதுவரை பதிவு செய்துள்ளன. மேலும் அரசுப் பள்ளிகளுக்கு, வழங்கப்பட வேண்டிய புத்தகங்கள் சம்பந்தப்பட்ட கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதைப் போலவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக 58 லட்சம் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் தங்களின் தாலுகா அலுவலகங்களில் அரசு கேபிள் டிவி பொது இ-சேவை மையங்களிலும், சென்னையிலுள்ள விற்பனை மையத்திலும் இந்தப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
புத்தகங்களை ஆன்லைன் மூலம் பெற விரும்பும் மாணவர்கள் www.textbookcorp.in என்ற இணையதளத்தில் புத்தகங்களின் இருப்பை அறிந்துகொண்டு வேண்டிய புத்தகங்களைப் பதிவு செய்து, பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பணம் செலுத்திய 72 மணி நேரத்துக்குள் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.
இவ்வாறு மைதிலி கே. ராஜேந்திரன் தெரிவித்தார்.