தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது எனவும், இதுதொடர்பாக 2 வாரத்திற்குள் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், பெருங்களத்தூரில் செயல்பட்டு வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா என்னும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்கள் பி.இந்திரா காந்தி, கே.இந்திரா, சி.ஜோதி, எஸ்.கவிதா. இவர்கள் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் kனுதாக்கள் ஒன்றை செய்தனர். அதில், ''நாங்கள் இதுவரை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால், நடப்பாண்டிற்கான ஆண்டுக்கான (2019) ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியாகும் வரை எங்களை பணியில் இருந்து நீக்கக்கூடாது என தடை விதிக்க வேண்டும்'' என தெரிவித்திருந்தனர்.
உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வுக்கு வந்த இவ்வழக்கின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நீதிபதி தீர்ப்பளித்து கூறியதாவது:-
கல்வி உரிமைச் சட்டத்தின்படி கல்வியின் தரத்தை உறுதிப்படுத்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 2012, 2013, 2014, 2017-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஆண்டும் (2019) தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஏற்கெனவே அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், 2019 மார்ச் 31-ம் தேதிக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு அவகாசம் வழங்கியது. தற்போது இந்த அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோருவதை ஏற்க முடியாது.
ஏற்கெனவே 60 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இன்னும் பணிகிடைக்காமல் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தொடர்ந்து ஆசிரியர்களாக பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது.
இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக பலமுறை அவகாசம் வழங்கியும் அவர்களால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்றால் அவர்கள் ஆசிரியர் பணிக்கே பொருத்தமற்றவர்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அவர்கள் மீது கருணை காட்ட முடியாது.
ஆசிரியர்கள்தான் மாணவர்களின் முன்னோடி. அவர்களே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதசூழலில் அவர்களிடம் இருந்து தரமான கல்வியை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஒரு மாணவர் 10-ம் வகுப்பில் தோல்வியடைந்தால் அவருக்கு எப்படி 11-ம் வகுப்பில் சேர அனுமதி வழங்க முடியாதோ அதேபோல ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணியில் தொடர அனுமதிக்க முடியாது.
மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் அந்தந்த பணிகளுக்கேற்ப குறைந்தபட்ச கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே தொடர்ந்து பணியாற்ற முடியும். இதில் ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது.
சம்பளம் பிடித்தம் கூடாது. எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு 2 வாரங்களுக்குள் நோட்டீஸ் பிறப்பித்து, அவர்கள் பதிலளிக்க 10 நாள் அவகாசம் அளிக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கெனவே பணிபுரிந்த நாட்களுக்கான சம்பளத்தை அரசு நிறுத்திவைக்கக் கூடாது. சம்பளம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது என்பதால் 2 வாரத்தில் அதை வழங்க வேண்டும். இனிமேல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது. மேலும், மனுதாரர்களின் கோரிக்கை ஏற்க முடியாத ஒன்றாகும். எனவே, இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.