சென்னை : சிறுபான்மை பள்ளிகளில் பணியில் சேர தகுதித் தேர்வு அவசியம் இல்லை என்ற நீதிமன்றத்தின் ஆணையை பள்ளிக் கல்வித்துறையும் ஏற்று சிறுபான்மை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை எனக் கூறியுள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2010-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.
தமிழகத்தில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு (2017) இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 29-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 30-ம் தேதியும் தகுதித் தேர்வு நடக்கவிருக்கிறது.
பயிற்சி முகாம்
சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் (பணி நிரந்தரம் ஆகாதவர்கள்) ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுக்குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்ட விளக்க உரையில் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வுக்கு பதிலாக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக கோடை விடுமுறை நாட்களில் புத்துணர்வு பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகள்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் (பணி நிரந்தரம் ஆகாதகவர்கள்) கட்டாயமாக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெறாதவர்கள் பணியில் இருந்து அகற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் குற்றச்சாட்டு
தமிழகத்தில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்றோர் நடத்தும் அரசு உதவி பெறும் சில பள்ளிகளில் அரசு விதிகளுக்கு மாறாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது, அதுமட்டுமல்லாமல் தரமற்ற ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள். இதனால் மாணவர்களுக்கு தரமான கல்விக் கிடைப்பதில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோரிக்கை
அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களின் தரத்தை உறுதி செய்யும் கடமை பள்ளிக் கல்வித்துறைக்கு உள்ளது. சிறுபான்மை கல்வி நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்பது மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கும் வண்ணமாக அமைகிறது. எனவே இதனை மறுபரிசீலனை பள்ளிக்கல்வித்துறை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
முறைகேடுகள்
சிறுபான்மை பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு இல்லை என்பதால், அவர்களை பணி நியமனம் செய்வதில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனவே இதுக்குறித்து பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டியல்
இதனிடையே, அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் 1000-க்கும் மேற்பட்டோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதித்தேர்வு இன்றி அவர்களைபணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications












